Posts Tagged ‘தலித்’

சோறு – சோறு நடத்திய பாடம்

ஜூன் 14, 2010

சோறு
சோறு நடத்திய பாடம்

அது ஒரு கிராமம். ஆம் கிராமம் தான். இங்கு பாரதிராஜா படத்தில் வருவது போல் பச்சை பசேலென்ற வயல் வெளிகளை நான் பார்க்க வில்லை. அது மேட்டாங்காடு என்று சொல்லப்படும் அதாவது மழை வந்தால்தான் பிழைப்பென்ற பகுதி.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே……………. பெருமை வாய்ந்த தமிழச்சமூகத்தின்  கூடப்பிறந்த பிறப்பான சாதி ஆதிக்கம் கடையைப்பரப்பி தாழ்த்தப்பட்டோரின்  ரத்தத்தை குடிக்கும் நிகழவுகள் தவறாது நடக்கும் கிராமம் அது. என்னுடன் வேலை செய்த இருவர்  இந்த ஊரில் தானிருக்கிறார்கள். அவர்களை பார்க்கத்தான் நானும் தோழரும் வந்திருக்கிறோம்.

அந்த நண்பர்கள் தன் ஊரின் சாதிக்கட்டுமானத்தைப்பற்றி சாதி ஆதிக்கத்தின் விளைவை  அவ்வப்போது சொல்லுவார்கள். சில சமயம் இருவரும் ஒரே நாளில் விடுமுறை எடுத்து விட்டு ஊர்ல பிரச்சினை என்பார்கள். என்னைப்பொறுத்தவரை  இதையல்லாம் அதிகம் கவனிப்பேன்  அவர்களிடம் பேசுவேன். அவர்களைப்பொறுத்தவரை ஆதிக்கசாதிப்பிரச்சினையை  இங்த நிறுவனத்தில் காது கொடுத்து கேட்டு ஆவேசமாக பேசும் நபர் நான்.
நானும் தோழரும் எங்கள் ஊரிலிருந்து அந்த கிராமத்திற்கு  செல்வதற்கு அவர்களிடம் வழிகேட்டபோது இரண்டு முதல் மூன்று பேருந்து பிடிக்க வேண்டும் என்றார்கள். இவ்வொரு பேருந்துக்கும் அரை மணி நேரம் என ஒரு வழியாய் வந்து சேர்ந்து நண்பர் சொன்ன படி  வந்து கொண்டிருக்கிறோம்.

அக்கிராமம் சரியாய் இரண்டாய் பிரிக்கப்பட்டிருக்கிறது. மெயின் ரோட்டுக்கு இருபுறமும் குடியிருப்பு பகுதிகள்  அநியாயத்துக்கு வறண்டு போன நிலங்கள் அதற்கெதிராக போராடாத மக்களின் மீது அனற்காற்றை வீசிக்கொண்டிருந்தது.  நண்பரின் செல் “not reachable ” என்றது. அவர் முன்னரே மேப் போட்டு கொடுத்திருந்தார் எப்படி வருதென்று. முதலில்  ஓட்டு வீடுகளாகவும்  தார்ஸ் போட்ட வீடுகளும்  அந்த சிறு வீதிக்கு இருபுறமும் இருந்தது. கொஞ்ச தூரம் நடந்தவுடன்   சந்திக்க வேண்டிய நபர்  ராஜா வந்தார் . அவருடனே பயணித்தோம்.

அவர் சொன்னார் ” நீங்க முன்னாடி பார்த்த அந்த வூடுங்கெல்லாம்  அந்த சாதிக்காறங்க ”  ,அந்த வீடுகள் சுமார் 150 இருக்கும் அப்புறம் வறண்ட பாலைவனம் போல இருந்த அந்தப்பகுதியில் நடந்து சென்றோம். அனல் வெகுவாய் அடித்தது.   நண்பர் சொன்னார் “இதுதான் எங்க ஊர் வாய்க்கால் ஆத்துல தண்ணீ வந்தா மழை வந்தா இங்கேயும் வரும்”. வரும் வழியில் கோயில் இருந்தது. “இதுதான் அவுங்க கோயில்” என்றார். ஒரு பத்து நிமிடம் நடந்திருப்போம். ஊர் வந்தது. ஊரை முதன் முறையாக யார் வந்து பார்த்தாலும் சொல்லிவிடுவார்கள். இது தாழத்தப்பட்டவர்களின் ஏரியாவென்று.

முன்னர் பார்த்த வீடுகளுக்கருகில் இருந்ததைப்போல  அல்ல, 90  சதவிகிதம் குடிசை வீடுகள், சிலர் இப்போதுதான் கட்டிடங்கள் சிறியதாய் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  ராஜாவின் நண்பர்கள் சிலர் எங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். பேசிக்கொண்டிருந்தோம். மதிய வேளை  நெருங்க நெருங்க நான் தோழரிடம் கிளம்பலாம் கிளம்பலாம் என்றபடி கிசுகிசுத்தேன். கிளம்பும் போது சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டுமென்று பிடித்து கொண்டார்கள்.

யார் வீட்டிலும் அதிகம் சாப்பிட்டு பழகாதவன் நான். அது வரை ஹோட்டலில் மொத்தமே 15 தடவை கூட சாப்பிட்டு இருக்க மாட்டேன். எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டுக்கு வந்துதான் சாப்பிடுவேன். எங்கு போனாலும் சரி மதிய நேரம் நெருங்கும் போது ஏதாவது ஒரு பொய்யைச்சொல்லி கிளம்பிவிடுவேன். தவிர்க்க இயலாமல் சாப்பிட வேண்டிவரும் போது தர்ம சங்கடத்தோடு சாப்பிட்டு எழுவேன். தாழத்தப்பட்ட உழைக்கும் கிராமத்து மக்களின் அவர்களின் உணவு முறை எப்படி இருக்கும் அதைப்பற்றி நினைத்ததேயில்லை. ஏன் நினைக்கிறேன் ? அவசியமே அதுவரை எழவில்லை.

என் மனதிற்கு தெரிந்ததெல்லாம் வீட்டில் தான் கரெக்டா இருக்கும். வீட்டில் என்றால் கொதிக்க வைத்த குடிநீர் சுத்தமாக வடிகட்டி அப்படி இப்படி என்று அதுவரை எனக்குத்தவறாக தெரியவில்லை. எப்போதும்  எங்கு சென்றாலும் உணவிற்கு முன் கிளம்பும் நான் தோழரோடு வந்திருப்பதால் பேசிக்கொண்டிருந்ததில் நேரத்தை  விட்டுவிட்டேன்.  சில மாதங்களாகத்தானே தோழரே அறிமுகம் . அவரிடம் முன்னரே சொல்லவும் தவறி விட்டேன். ஒரு வழியாக  சாக்கு சொல்லிவிட்டு தோழரை இழுத்துச்செல்லாத குறையாக கிளம்பினேன்.

கிளம்பும் போது என்னுடன் பணிபுரியும் இன்னொருவர் ” அதெல்லாம் முடியாது சாப்பிட்டுட்டுதான் போயாகணும்” என்றபடி கைகையை இழுத்துக்கொண்டு சென்றார். அருகில் அவர் வீடு. அது ஒரு குடிசை பனை இலையால் வேயப்பட்டிருந்தது. . அக்குடிசைக்கு வெளியே ஒரு கட்டிலைப் போட்டார்கள் . அது கயிற்றுக்கட்டில் வெள்ளைக்கயிறு பழுப்பு நிறமாய் பல்லைக்காட்டியது. அதற்கு எதிரில் இரு ஸ்டூல்களை போட்டார்கள் இரண்டிலும் இரு தட்டுக்கள் வைக்கப்பட்டன.

தட்டு நிறைய சோறு போட்டார்கள். எங்களை உட்காரச்சொன்னார்கள். வேறு வழியின்றி தயக்கத்தோடு சங்கடத்தோடு உட்கார்ந்தேன். தட்டிலிருந்த சோற்றைப்பார்ர்தேன். என் வாழக்கையில் இந்த கலரில் (லைட் பழுப்பு) சோறு இருப்பதே இப்போது தான் தெரிகிறது. ஏதோ குழம்பு ஊற்றினார்கள். பார்ப்பதற்கே வழவழப்பாக  அருவருப்பாக இருந்தது. “ உட்கார்ந்தாயிற்றே இனி எழுந்திருக்கவும் முடியாதே”. தோழர் தயக்கமின்றி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

குழம்மில் கைகை வைத்தேன், எனக்கு என்னபோல் இருந்தது. மனதை திடமாக்கிக்கொண்டு  சோற்றைப்பிசைந்தேன் குழம்போடு, “அய்யோ!!!!!! எந்திரிச்சும் ஓட முடியாதே” பிசைந்த சோற்றில் ஒரு கவளத்ததை வாயில் போட்டேன். என் வாழ்வில் அவ்வளவு கேவலமான சுவை அது. வயிற்றைக் குமட்டியது வாந்தி வந்துவிடுமோ பயம் எனக்கு, எதிரில் எல்லோரும் நிற்கிறார்கள். வேறு வழியே இல்லை.

கண்ணை இறுக்க மூடினேன். பிசைந்த சோற்றுக்கவளங்கள் எப்படி என் வாய்க்குள் போயின என்பது எனக்குத்தெரியவில்லை. ஒரு பெருமிதம் எனக்கு ” அப்பாடா ஒரு வழியா முடிச்சாச்சு” கிளம்பினேன் அங்கிருந்து. பேருந்தில் வரும் போது கூட தோழரிடம் எதுவும் பேச வில்லை. பேருந்து நிறுத்தத்தில் பேசிவிட்டு அவரும் நானும் கிளம்பிவிட்டோம்.

வீட்டில் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஹோட்டலில் சாப்பிட்டதாய் சொன்னேன். தோழர் கொடுத்த புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு கடுமையான செயலை செய்தது போல  குழம்பினேன். இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் உழைக்கும் மக்கள் உண்ணும் உணவு எனக்கு கேவலமாய்த் தெரிந்திருக்கிறது. அதைத்தின்றால் வயிறு குமட்டுகிறது. பச்சைத்தண்ணீர் எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

வ்வளவு கேவலமான வாழ்வை வாழந்திருக்கிறேன்  எனில் அது எவ்வளவு கேவலமானது, நான் எவ்வளவு கேவலமானவன். அந்த சோற்றை தின்றுவிட்டுதான் இதோ இந்த சாலையை உழைக்கும் மக்கள் செப்பணிட்டார்கள். இதோ நான் படுத்திருக்கிறேனே இந்தக்கட்டிலை செய்தார்கள். வீட்டைக் கட்டினார்கள். அதில் சொகுசாய் வாழும் நான் அவர்களின் உணவை குற்றம் சொல்லிக்கொண்டு வாழும் போது  ,  நான் இந்த மக்களிடமிருந்து எவ்வளவு அந்நியமாய் இருக்கிறேன்.எவ்வளவு கேவலமானவன்?  எவ்வளவு கேவலமானவன்? எவ்வளவு கேவலமானவன்?  நான் வெறுப்பாய் தின்ற சோற்றில் எவ்வளவு பெரிய பாடம் கற்றிருக்கிறேன்.

எப்படியும் பல ஆண்டுகளை கடந்து போன அந்த சம்பவம் என் நினைவில் அகலாத ஒன்றாகி விட்டது. எதிர்பாராத அந்நிகழ்ச்சி  என்னுடைய  நடுத்தர வர்க்கத்துக்கே உரித்தான டீசண்ட் -ஐ புரட்டிப் பிய்த்து எறிந்துவிட்டது.

B.P.O அடிமை .காம் பகுதி-3,அடிமைகளின் சொர்க்கம்

I.T-ன் ஆணாதிக்கம்

https://kalagam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

பார்ப்பன மணியின் நோய் ஆராய்ச்சி அல்லக்கை மருத்துவர் பழ.கருப்பையா புது ரிலீஸ்

ஓகஸ்ட் 26, 2009

பார்ப்பன மணியின் நோய் ஆராய்ச்சி
அல்லக்கை மருத்துவர் பழ.கருப்பையா புது ரிலீஸ்

பழ.கருப்பையா. மிகச்சிறந்த கட்டுரையாளர். எந்த ஒரு விசயத்தையும் தேன் போல அருமையாக எழுதுவார். அவரின் சில கட்டுரைகள் நந்தனில் கூட வந்ததாக கேள்வி. கடந்த புதன் கிழமை பார்ப்பன பாதாளச் சாக்கடையின் புழுவாக தன்னை வெளிக்காட்டிய போது பத்திரிக்கை உலகம் அவரை உச்சி முகர்ந்திருக்கும். அப்படி ஒரு சேவை பார்ப்பனிய பாதத்துக்கு.

கருப்பையா எழுதிய கட்டுரை ” ஏன் இந்த நோய்ச்சிந்தனை?” ஆம் அந்தக் கட்டுரைதான் அவரின் பார்ப்பன நோயை வெளியே எடுத்துக்காட்டியிருக்கிறது. கருணாநிதி சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவின் போது  சொன்ன வார்த்தைகள் தினமணியியின் பாதத்தில்  முள்ளாக குத்த  மணியின் முக்கிய  விருந்தாளியான அவருக்கோ அது இதயத்தையே குத்தி விட்டதாம். முன்னேறுவதற்கு சாதி தடை இல்லை அது ஒரு கற்பனை, பிழைப்புவாதமென்கிறார்.

கருணாநிதி ஒரு கடைந்தெடுத்த பிழைப்புவாதி என்பது தெரிந்த விசயமே. ஆனால் அவர் பிழைப்புவாதியென்பதை பார்ப்பனரை விமர்சனம் செய்தவுடன் தான் புரிந்து கொண்டு வெம்பியிருக்கிறார் அன்ணன் தினமணிக்கு தட்டாத தம்பி. சமீப காலமாக தின மணிக்கு தமிழர்கள் மீதும் திராவிட இயக்கம் மீதும் அளவில்லா பற்று, அய்ய்யோ திராவிட இயக்கம், தமிழகம் இப்படி சீரழிகிறதே என ஒப்பாரி வைத்து, தான் நினைப்பதை தன் விருந்தாளிகள் (நெடுமாறன், பழ.கருப்பையா, நடராஜ், விஜயன்,)
மூலம் பொதுக்கருத்தாக்க முனைகிறது.

சர்வக்ஞர்  பிற்படுத்த சாதியை சேர்ந்தவரென்பதால் புகழ் பெற முடியவில்லை என்றார் கருணாநிதி. உடனே பார்ப்பன பதர்கள் பொங்கியெழ அதற்கு தடை போட்டு நானே இறங்குகிறேன் என இறங்கி விட்டார் கருப்பையா . அவரின் வாதமெல்லாம் உதாரணமெல்லாம் எதற்கு ஏன் எல்லாம் ஒன்றை  மட்டுமே சொல்லுகின்றன ஒன்றை நீரூபிக்க “சாதி வேறுபாடில்லை” என்ற பொய்யை மெய்யாக்க.  வள்ளுவன் என்ன மேல் சாதியா அவன் முன்னேற புகழ்பெற எந்த சாதி தடையாய் இருந்தது?

தமிழகத்தை அதன் போக்கை மாற்றிய அன்ணா முற்பட்ட சாதியா?  எல்லாவற்றையும் விட கருணாநிதி என்ன மேல் சாதியா கீழ் சாதி தானே, அவர் 5 முறைமுதல்வராக வில்லை அவரை எந்த சாதி தடுத்தது?  இத்தனைக்கும் அவர் சாதி சிறுபான்மை. பாரதி பார்ப்பான் என்பதால் மட்டும் புகழ்பெறவில்லை அவனுடைய அறிவே அவனின் புகழுக்கு காரணம் அப்படிப்பார்த்தால் பாரதிதாசன் கூட பிற்பட்ட சாதிதானே?

உயர் சாதியான பார்ப்பனர்கள் தொன்று தொட்டு வழிபட்டு பின்பற்ற அதை எழுதியவர்களின் சாதி தடுக்க வில்லையே? திருமூலர் கூட இடையன் தானே அவர் புகழடையவில்லையா? ஆக சாதி எப்போதும் ஒருவன் முன்னேர தடையாய் இல்லை.

மொத்தமாய் அவர் சொல்லவருவது பார்ப்பனர்கள் சாதி பார்ப்பதில்லை கீழ் சாதிக்காரன் எழுதிய புத்தகத்தை தனது வேத நூலாக பயன் படுத்துகிறார்கள். ஆனால் கீழ் சாதியிலிருந்து போன கருணாநிதி போன்றவர்கள் தான் சாதியை தினம் வளர்க்கிறார்கள். சாதியை கடந்த சமுதாயத்தில் சாதிப்பிரச்சினை வேண்டுமென்றே புகுத்தப்படுகின்றது.

இது சாதி இல்லாத சமுதாயமா?

கேட்கும் போது இனிப்பாகத்தான் இருக்கிறது? ஆனால் உண்மைகள் காதில் அறைந்து சொல்கின்றன , உறைக்கவைக்கின்றன. பாரதி பார்ப்பனன் என்பதனைத்தவிர எதனால் புகழ்பெற்றான்?. மதிமாறன்  எழுதிய பாரதிய ஜனதா பார்ட்டியிலும் தோழர் மருதையன் எழுதிய அது குறித்த கட்டுரையிலும் தெளிவாய் கோடிட்டு காட்டினார்கள். பறையர்கள் இந்துக்களை அடித்துவிட்டார்களே ஏன் இன்னும் சும்மா இருக்கிறீர்கள் என இந்துக்களை திமிறி எழச்சொல்கிறார் பாரதி. பறையர்களுக்கும் பூணூல் அணிவித்துவிட்டு  அவர்களை இந்துக்களை கொண்டு தாக்க  சொன்ன ஒரு கிரிமினல் பேர்வழி யாரால் தூக்கிப்பிடிக்கப்படுகிறான் பார்ப்பனீய கருத்துக்களை தூக்கிப்பிடிப்பவர்களைத் தவிர?

பிறப்புச்சாதிக்குண்டான தொழிலை செய்யவேண்டுமென்று சட்டம் போட்ட ராஜாஜி என்ற சாதி வெறி பிடித்த அயோக்கியன் மூதறிஞர் எப்படி ஆனார் தன் பிறப்புத்தகுதியைத்தவிர?  ஏன் நம்முடைய சங்கராச்சாரியை எடுத்துக்கொள்ளுங்கள் சொர்ணமால்யாவோடு கும்மாளம், பெண் எழுத்தாளரை மானபங்க படுத்த முயற்சி, கொலை வழக்கில் முக்கியபுள்ளி என இத்தனை கேடித்தனங்கள் இருந்தாலும்  அவன் ஜெகத் குருவாக நீடிக்க நீட்டிக்க வைப்பது எது அந்த பூணூலைத் தவிர.

மற்ற சாதியில் பிறந்த யாரும் குற்றமே செய்யவில்லையா எனலாம் அப்படி சொல்லவில்லை எல்லா சாதியிலும் அயோக்கியன் இருக்கலாம் . ஆனால் அயோக்கியனாய் இருந்தாலும் பார்ப்பனன் என்பதற்காகவே மேற்கண்ட “தலைவர்களெல்லாம்” புகழப்பட்டார்கள் , புகழப்படவுமிருக்கிறார்கள் என்பது உண்மையா பொய்யா? அதற்கு பார்ப்பன சமூகமே முன் வந்து ஆதரவளிப்பதும் பொய்யா?

சட்டசபையில் நான் பாப்பாத்தி என சூளுரைத்த செயலலிதாவை கண்டித்ததா தினமணி, மடத்தைவிட்டு ஓடிப்போன காமேஸ்வரனின் லீலைகளை விமர்சித்ததா தினமணி, சர்வக்ஞர் விழாவில் பேசிய கருணநிதிக்கு தனது அல்லக்கை மூலம் விமர்சனம் செய்யும் திணமணி இப்படி செயாவை சாதி ரீதியாக ஒப்பிட்டு எழுதுமா ஒருவேளை(!!!!!!!) வந்தாலும் நம் கருப்பையாதான்  எழுதிவிடுவாரா என்ன?

என்ன சாதி தடை இல்லையா? நிகழ்காலம் கொஞ்சமல்ல ரொம்பவே கசக்கிறது. அகற்றப்படாத ரெட்டைக்குவளைகள், ஒதுக்கப்படும்குடியிருப்புக்கள்,மறுக்கப்படும் ஆலய வழிபாட்டு உரிமை இப்படி எத்தனையோ இருக்க சாதி ஒரு தடை இல்லை என்கிறது பார்ப்பனீயம், கருப்பு பார்ப்பனன் பழ.கருப்பையாவோடு கும்மியடித்தவாறே.

வள்ளுவனுக்கு குறுக்கே நிற்காத சாதி எதற்கு நந்தனை மறித்து எரித்தது?  வேதம் எழுத தடை விதிக்காத சாதி ஏன் ஏகலைவன் விரலை வெட்டியது.  திருமூலரின் புகழை தடுக்காத  சாதி நிகழ் காலத்தில்   ஆறுமுக சாமியை எதற்கு  அடித்து வெறியாட்டம் போட்டது?

அன்ணாதுரையும் கருணாநிதியும் முதல்வரானது சாதி இறந்ததற்கு அடையாளமாம். அப்படியாயின் கயர்லாஞ்சி பாலியல் கொலைகளும் , பாப்பாப்பட்டி கீரிப்பட்டி கொடுமைகளும் எதை உணர்த்துகின்றன?தமிழ் நடராசனின் காதில் விழாமலிருக்க ஊளையிட்ட தீட்சிதர்களின் ஆணவம் எதை காட்டுகிறது? ஒரு வேளை இவையெல்லாம் மாயையாக தெரிகிறதா தினமணிக்கும் கருப்பையாவுக்கும்.

மாயையாகத்தெரியலாம் ஆனால் பாதிக்கப்படபோவது பாதிக்கப்பட்டது உழைக்கும் மக்களல்லவா?பூணூலை மாட்டிக்கொண்டு டேய் சூத்திரப்பசங்களா நான் மேல் சாதி என்று  கிளம்பும் பார்ப்பனத்திமிர்தான்  திராவிட சித்தாந்தம் சீரழிவதை பற்றிகவலைப்படுகின்றது. அதுவே ஒப்பாரியும் வைக்கிறது எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று.

இளையராசா மேல்  தாழ்த்தப்பட்டவரென்பதால் சொல்கிறது ஏன் அவர் முன்னேறிவரலை திறமை இருந்தா நீ வா ! உன்னை எது தடுக்குது? இளையராசா கும்பாபிசேகத்துக்கு காசுகொடுத்தாலும் உள்ளே வரவிடாமல் எது தடுத்ததோ? எது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை வழக்குப்போடு முடக்கியதோ,  மகாமகத்தின் போது தாழ்த்தப்பட்ட அதிகாரிகளை  எது மாற்றியதோ அதுதான் பார்ப்பானை பார்ப்பானவே நீட்டிக்கவும் வைக்கிறது  தாழ்த்தப்படவனை பிற்படுத்தப்பட்டவனை அப்படியே இருக்கச்செய்கிறது.

என்னதான் பணக்காரனாயிருந்தாலும் கருவறைக்குள் செல்லலாமா வேண்டாமா என்பதை பிறப்புதானே தீர்மானிக்கிறது. கோயிலை அரசுவசமாக்கிக்கொண்டால் சாமிக்கு நைவேத்தியம் பண்ணமுடியுமா  என கவலைப்படும் தினமணி  அந்தக்கோயிலுக்கு தன் உழைப்பை பொருளைகொடுத்தவனுக்கு கருவறையில் நுழைய அதிகாரம் இல்லை என்கிறது .

பழ.கருப்பையா மூலம் தனது பார்ப்பன அரிப்பை தீர்த்துக்கொண்ட தினமணிக்கு  நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும்  அஞ்சத  நெறிகளும் எதற்காக யாருடைய தேவைக்காக?  எதற்கு? பூணுலுக்கு மேக்கப் போடுவதைத் தவிர.